Show all

சல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சேலத்தில் திரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சேலத்தில் திரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

     தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்த நடுவண் அரசு தடை விதித்துள்ளது. எனவே, சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அரசியல் கட்சியினர் ஒருபுறம் வலியுறுத்தி வரும் வேளையில், பல்வேறு மாணவ அமைப்புகள் தற்போது போராட்டத்தில் இறங்கி உள்ளன. இதனால், தமிழகத்தில் கட்டாயம் சல்லிக்கட்டை நடத்தியே ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

     இந்த நிலையில் சல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சேலத்தில் திரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழ்நாடு மாணவர் இளைஞர் பேரவை சார்பில் நேற்று காலை சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தவறிய நடுவண் அரசைக் கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புலனம்;, முகநூல், கீசசகம் போன்ற சமூக வலைதளங்களில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று திரண்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

     ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாணவர் இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசுவரன் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் சல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத நடுவண் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில், ‘சல்லிக்கட்டு மீதான தடையை நீக்காவிட்டால், தடையை மீறி நிச்சயமாக சல்லிக்கட்டை நடத்தியே தீருவோம். இதனால், ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் சந்திக்க தயாராக உள்ளோம். உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்தும் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுப்பதற்கு எவ்வாறு சட்டத்;தில் இடம் இருக்கிறதோ அந்த வகையில் உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி இந்த ஆண்டு சல்லிக்கட்டை நடத்தியே தீருவோம்’

என்றனர்.

     இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

     இதற்கிடையே, மதியம் 12.30 மணிக்கு சேலம் செரிரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் திடீரென்று வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்து சாலையில்; திரண்டனர். பின்னர் கல்லூரி நுழைவாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் சல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி முழக்கப் போராட்டம் நடந்தது. இந்த முழக்கப் போராட்டத்திற்கு மாணவர் அமைப்பை சேர்ந்த ஜீவா, ஆசீப், சிவா, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிக்கும் அரசாக நடுவண் அரசு உள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் நடுவண் அரசு அவசர சட்டத்தை இயற்றிட வேண்டும் என்றும் முழக்கப்  போராட்டத்தின்போது முழக்கம் எழுப்பப்பட்டது.

     மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு திடீரென முழக்கப் போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்த சேலம் அஸ்தம்பட்டி காவல்துறையினர் விரைந்து வந்து மாணவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிறிது நேரம் போராட்டம் நடத்தி விட்டு; கலைந்து சென்ற மாணவ-மாணவிகள்,

     சல்லிக்கட்டு நடந்தி;ட உரிய நடவடிக்கை எடுக்கும் வரை வெவ்வேறு வகையான போராட்டம் முன்னெடுக்கப் படும் என்று எச்சரித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.