நடுவண் அரசின்
கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் விழாவை நீட்டிப்பதாக நடுவண் அரசு இன்று அறிவித்துள்ளது. நடுவண் அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல்
விழா நீக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. சல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட
தடையை எதிர்த்து கொதித்துப்போய் கிடக்கும் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை
கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதாக வெளியான இந்தத் தகவல் தமிழர்களை மேலும்
கொந்தளிக்க வைத்தது. நடுவண் அரசின் இந்த திடீர் முடிவை எதிர்த்தும்,
கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் விழா தொடர்ந்து இடம்பெற வேண்டும் எனக் கோரியும்
தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆளுங்கட்சியான
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவும் இதையே வலியுறுத்தி உள்ளார். மேலும், தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க.,
காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி
அறிக்கை வெளியிட்டன. வழக்கம் போல் பொங்கல் விழாவிற்கு கட்டாய அரசு
விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடுவண் அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம்
சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பாட்டம்
நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கட்டாய அரசு விடுமுறை பட்டியலில்
பொங்கல் விழா தொடர்ந்து இடம்பெறும் என்றும், அதற்கு பதிலாக வரும் 28-ந்தேதி தசரா விடுமுறை
ரத்து செய்யப்படும் எனவும் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. சல்லிக்கட்டுக்கும் உடனடியாக அவசர சட்டம் இயற்றி
சல்லிக்கட்டுடன் பெங்கல் விழா முழுமை அடைய நடுவண்அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.