Show all

திருக்குறளில் உள்ள ஆதிபகவன் ஞாயிற்றைக் குறிப்பதாகும்!

14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திருக்குறளில் உள்ள ஆதிபகவன் ஞாயிற்றைக் குறிப்பதாகும். அகர, எண்குணத்தான், பொறிவாயில் ஐந்தவித்தான், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான் என்பவை அனைத்தும் தமிழை அறிவுத் தெய்வமாக முன்னெடுக்கும் வகையிலான சொற்களே.

திருக்குறளில் வருகிற முதலாவது அதிகாரமான வாழ்த்து அதிகாரம் தமிழ்மொழிக்கான வாழ்த்தே ஆகும். திருக்குறளுக்கு- தெளிவுரை எழுதிய பார்ப்பனியர்கள் அதை கடவுள் வாழ்த்தாக்கிட- திருக்குறளுக்கு எழுதப்பட்ட அனைத்து தெளிவுரைகளும் அதை அப்படியே பின்பற்றத் தொடங்கி விட்டன. 

திருவள்ளுவப் பெருந்தகை- பாரதிதாசன் அவர்களைப் போல உணர்ச்சித் தளத்தில் நின்று திருக்குறளை எழுதியிருந்தால் நேரடியாக தமிழ் வாழ்த்து என்றே முதல் அதிகாரத்தை முன்னெடுத்திருந்திருப்பார். ஆனால் திருவள்ளுவர் அறிவுத் தளத்தில் திருக்குறளை முன்னெடுத்ததால் தமிழை அதன் சிறப்பு அடையாளமான அகரத்தில் வாழ்த்தினார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு 
இது திருவள்ளுவரின் முதல் குறள்.
அதாவது:-
1.அகர முதற்றே எழுத்தெல்லாம்.
2.ஆதிபகவன் முதற்றே உலகெல்லாம்

உல் என்றால் வட்டம். அதனால் தமிழர் நமது புவியை மட்டுமல்லாமல்- வட்டமான கோள்களை எல்லாம் உலகம் என்றே குறிப்பிட்டனர். அந்த வகையாக ஏழுகோள்களை தமிழர் ஏழுலகம் என்று சொல்ல, ஏழுலகத்திற்கு பார்ப்பனியர் வேறு பொருள் கற்பிக்கப் போய், இன்றைக்கு ஏழு உலகம் வேறாகவும் ஏழு கோள்கள் வேறாகவும் பார்க்கப்படுகிறது.

எழுத்துக்களுக்கு அகரம் முதல்.
கோள்களுக்கு ஞாயிறு (ஆதிபகவன்) முதல். இந்தக் குறளில் திருவள்ளுவர் போற்ற வந்தது அகரத்தை. 

ஆனால் பார்ப்பனியர்களோ, திருவள்ளுவர் போற்ற வந்தது ஆதிபகவன் என்று தெரிவித்து, அந்த ஆதிபகவன் என்ற சொல்லுக்கு ஆன்மீகச் சாயமும் பூசி விட்டார்கள்.

இரண்டாவது குறளில் திருவள்ளுவர் இன்னும் தெளிவாகவே தான் குறிக்க வந்த அகரத்திற்கு பெருமை சேர்க்கிறார். கல்விக்கு அடிப்படையான எழுத்துக்களை- எழுத்துக்கு முதலான அகரத்தை- அகரம் முதலாக னகரம் வரையான முதல் எழுத்துக்களாக முப்பது எழுத்துக்களைப் பெற்றிருக்கிற தமிழ் அடிப்படையை (நற்றாள்) போற்றிக் கொள்ளாமல் (தொழாமல்) விடுவோமானால் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன என்று கேள்வி எழுப்புகிறார். 

பின் வரும் பத்து குறள்களிலுமே மொழியின் பரிமாணங்ளையேதாம் விரித்துரைக்கின்றார். திருவள்ளுவர் வாழ்த்து எழுதியது கடவுளுக்கோ தெய்வத்திற்கோ அல்ல. மொழிக்கே- கல்வி தரும் மொழிக்கே. அறிவான மொழிக்கே தமிழ் மொழிக்கே என்பது, பத்து குறள்களையும் மீண்டும் மீண்டும் எந்த சார்பும் இல்லாமல் மற்ற மற்ற குறள்களையே பொருத்தி பொருத்தி ஆய்ந்தோமேயானல் தெளிவாகப் புரியும்.

திருக்குறளில் உள்ள அகரம், எண்குணத்தான், பொறிவாயில் ஐந்தவித்தான், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான் எல்லாமே அறிவான தமிழ் மொழியைக் குறிப்பதற்கானவைகளே. 

மொழியை உடைமையாக, அன்பாக சுட்டும் இடங்களில் தாயாக பெண்பாலாகக் கொண்டாட வேண்டும். அறிவாக கொண்டாடும் போது தந்தையாக ஆண்பாலாகக் கொண்டாட வேண்டும். அந்த வகையில்தான் திருவள்ளுவர் தமிழை அகரமாகவும் ஆண்பாலாகவும் குறித்திருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.