Show all

சாதகம், சோதிடம் குருட்டாம் போக்கானதா! சிலருக்கு பலிக்கிறது -சிலருக்கு பலிக்கவில்லை

27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சேரநாட்டில் மாமன்னன் சேரலாதன் அரசவை கூடியிருக்கிறது. அரசி மணக்கிள்ளியார் அருகில் அமர்ந்திருக்கிறார். சேரன் செங்குட்டுவன், இளங்கோ அடிகள் பக்கம் பக்கமாக இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். அன்றைய அரசவையில் நிமித்தகர் ஒருவரின் தர்க்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

அந்த நிமித்தகர் சேரன் செங்குட்டுவன் மற்றும் இளங்கோ அடிகளின் பிறந்த நாளை வைத்து பலன்களைக் கணித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இளங்கோ அவரின் வாதங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார். 

சோதிடம், சாதகம் என்பவை, தமிழகத்தில் நிமித்தகம் என்ற பெயரில் முதலாவதாக முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றக் கலை ஆகும். இந்தக் கலை மூலம் வானியல் குறித்தும், காலம் குறித்தும் தமிழ்முன்னோர் முழுமையாக உணர்ந்தறிந்து கோள்கள், கிழமைகள், மாதங்கள், ஆண்டுக்கணக்கு- கலிஆண்டு என்கிற தொடர்ஆண்டு கணக்கு முறை ஆகியவற்றை எல்லாம் உருவாக்கியிருந்தனர்.

அந்த அடிப்படையில்-  மனிதனுக்கு அடிப்படையான இயல்பு அவனின் பிறந்த நாளையொட்டி அமைகிறது. நடப்புநிலை பலன்கள் கோள்களின் இயக்கத்தை ஒட்டி மாறுகிறது என்பதுதாம் சாதகம் சோதிடத்தின் அடிப்படையாக அமைத்தனர். ஒருவனின் வாழ்க்கை முழுவதும் இப்படித்தான் அமையும் என்று சாதகம் சோதிடம் அதுவரை உறுதிப்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் இளங்கோ அடிகள் காலத்தில் தமிழகம் முன்னேற்றக் கலையின் அடுத்த கட்டத்தை அடைந்திருந்தது. அது நம்முடைய இயல்புகளை நாமே அமைத்துக் கொள்ள முடியும் என்பதும், நம்முடைய செயல்களுக்கான பலன்கள் செயல்களை யொட்டி மாறும் என்பதும் ஆகும். 

அந்தப் பார்ப்பனிய நிமித்தகர், அதுவரையிலான சோதிட சாதகத்தில் திறன் பெற்றிருந்தாலும், தமிழகத்தில் அப்போது ஆய்வைத் தொடங்கி இருந்த முன்னேற்றக் கலையின் அடுத்த கட்டமான- நம்முடைய இயல்புகளை நாமே அமைத்துக் கொள்ள முடியும் என்பதும், நம்முடைய செயல்களுக்கான பலன்கள் செயல்களை யொட்டி மாறும் என்பதும் குறித்து உரிய புரிதல் இல்லாதவராக இருந்தார். 

இளங்கோ அடிகள் அந்த நிமித்தகரோடு வாதாடியும், அவர் இளங்கோ அடிகள் வாதத்தை ஒப்புக்கொள்ளாமல், இளவல் அவர்களே! உங்கள் சாதகத்திலேயே இந்த நாட்டை ஆளும் வகையாக கோள்கள் நிலை அமைந்திருக்கிறது. அதனால் உங்கள் அண்ணார் சேரன் செங்குட்டுவன் அகவையில் மூத்தவராக இருந்த போதும்கூட உங்களுக்கே இந்த நாட்டின் அடுத்த அரசராக முடிசூட்டப்படும் என்று வாதிட்டார். 

இது நல்ல அறைகூவலாக இருக்கிறது. இதோ நான் இப்போதே துறவு மேற்கொள்கிறேன். அண்ணனே இந்த நாட்டை ஆள்வதை உங்கள் வாழ்நாளில் பார்க்கத்தான் போகின்றீர்கள் என்று துறவு மேற்கொண்டார்கள் இளங்கோ அடிகள்.

கண்ணகியின் கதையை காவியமாக்கிய இளங்கோ அடிகள் அந்தக் கதை நடப்பதே- நம்முடைய இயல்புகளை நாமே அமைத்துக் கொள்ள முடியும் என்பதும், நம்முடைய செயல்களுக்கான பலன்கள் செயல்களை யொட்டி மாறும் என்பதும் ஆன அடிப்படையிலேயே என்பதாக நிறுவுகிறார்.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்.” 
என்றவாறு சிலப்பதிகாரத்தைத் தொடங்கி- அதையே நிறுவ சிலப்பதிகாரக் காவியத்தை நமக்கு வழங்குகிறார்கள் இளங்கோஅடிகள்.

சாதகம், சோதிடம் குருட்டாம் போக்கானதா! சிலருக்கு பலிக்கிறது -சிலருக்கு பலிக்கவில்லை என்பதான நமது தலைப்பிற்கு இப்போது வருவோம்.

சாதகம், சோதிடம் குருட்டாம் போக்கானது அல்ல. நாம் பிறந்த அடிப்படையில் நமது இயல்பு அமைகிறது என்கிற சாதகம் சோதிடம் உண்மையான கலைதான். சிலருக்கு பலிக்கிறது -சிலருக்கு பலிக்கவில்லை என்பதற்கு புறக்காரணிகள்தாம் காரணம். பழைய காலத்தில் புறக்காரணிகளோ எந்த அயல் சார்புகளோ இல்லாமல் தமிழர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் நிமித்தகர் சொன்ன பலன்கள் எல்லோருக்கும் பலித்திருக்கும். 

ஆனால் இந்தக் காலத்தில் தமிழர்கள் பல்வேறு சார்புகளில் இருக்கிறோம். பல்வேறு முயற்சிகளில் இருக்கிறோம். பல்வேறு புறக்காரணிகளின் தாக்கம் நம்மின் இயல்பை மாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே சோதடம் சாதகம் என்பது நமக்கு முழுமையாகப் பலிக்காது. 

ஒரு சோதிடர்- உங்கள் பிள்ளையின் சாதகத்தைப் பார்த்து -கோள்களின் இருப்பு, கோள்களின் பார்வை,  நடப்பு திசை, நடப்பு புத்தி ஆகியவற்றைக் கணித்து உங்கள் பிள்ளை மருத்துவர் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பார். உறுதியாக அது உண்மைதான். 

ஆனால் புறக்காரணி உங்களுக்கு வாய்ப்பாக இல்லையே. சமூக ஏற்றதாழ்வில் உங்கள் பொருளாதார நிலைக்கு உங்கள் பிள்ளையை அரசு பள்ளியில் சமச்சீர் கல்வியில் சேர்த்துப் படிக்க வைத்திருப்பீர்கள். அவன் நல்ல மதிப்பெண் வாங்குவதற்கு சாதகம் உறுதியாக ஒத்துழைத்திருக்கும். 

ஆனால் தமிழினத்தின் சாதகம் நன்றாக இல்லையே. நமது மொழியும் தெரியாத, நமது இயல்பும் புரியாத, நம்மை சமமாக மதிக்காத, ஆதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில்- அவர்கள் கல்விதிட்ட அளவுகோளில் உங்கள் பிள்ளையை அளக்கும் நீட் தேர்வில் வெற்றிபெற சாதகம் வேலை செய்யவே செய்யாது. 

எனவே நாம் தற்காலத்தில் நமக்கான முன்னேற்றக் கலையாக முன்னெடுக்க வேண்டியது இளங்கோ அடிகள் வகுத்துத்தந்த கோட்பாட்டைத்தான். 

தமிழகத்தில் இளங்கோஅடிகள் காலத்தில் ஆய்வைத் தொடங்கி இருந்த முன்னேற்றக் கலையின் அடுத்த கட்டமான- “நம்முடைய இயல்புகளை நாமே அமைத்துக் கொள்ள முடியும் என்பதும், நம்முடைய செயல்களுக்கான பலன்கள் செயல்களை யொட்டி மாறும்” என்பதான புரிதலை தமிழர்கள் மீட்டெடுக்க வேண்டும்.

அயல் சார்புகளோ, புறக்காரணிகளோ முற்றாக களையப்பட வேண்டியவை என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டு செயலாற்றினால் மட்டுமே தமிழர்களுக்கு நிலையான வெற்றிக்கு வாய்ப்பு கிடைக்கும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.