Show all

இறை குறித்த வினாக்களும் விடைகளும்

இறை என்பது தமிழ்ச்சொல் மட்டுமே. இறைக்கான விளக்கத்தைத் தமிழில் மட்டுமே தேட வேண்டும். இறை குறித்த  புரிதலுக்கு சில வினாக்களை எழுப்பி அதற்கான விடைகளில் இறை குறித்த புரிதலைத் தமிழியல் அடிப்படையில் தெளிவுபடுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும். 

1. இறை என்கிற தமிழ்ச்சொல்லுக்கு நேரடியான பொருளில் உலகில் எந்த மொழியாவது சொல்லைக் கொண்டுள்ளதா?
கொண்டிருக்க வில்லை.

2. இறை என்பதற்கு தமிழ் தெரிவிக்கும் பொருள் என்ன?
வெளியில் (கடவுளில்) இறைந்து கிடப்பது இறை.

3. இறை மொத்தம் எத்தனை?
நிலம், நீர், தீ, காற்று என இறை மொத்தம் நான்கு. இதை நாற்திரம் என்றும் தமிழ் பேசுகிறது.

4. இறை எங்கே இருக்கிறது?
நிலம், நீர், தீ, காற்று ஆகிய நாற்திரங்கள் ஒன்றே பலவோ ஆக கோள்களின் அஃறிணை பொருட்களிலும், ஓரறிவு மரம் முதல் ஆறறிவு மனிதன் வரையிலான அனைத்திலும் உள்ளடங்கி காணப்படுகிறது. 

5. இறைக்கு என்னதான் வேலை?
நமது உணவின் மூலம், இயக்கமும் எல்லையும் காலக்கெடுவும் உடைய நமது மெய்யின் உள்ளடக்கமாக அமைந்து, நாமாகவே இயங்க ஒத்துழைக்கிறது. நமது காலக்கெடு முடிகையில் இறத்தல் என்கிற நடவடிக்கையில் நமது உடல் மீண்டும் நிலம், நீர், தீ, காற்று ஆகிய இறையாகிறது. 

6. இறைக்கு உயிர் உண்டா?
இயக்கமும் எல்லையும் காலக்கெடுவும் உடைய ஓரறிவு உயிரியிலிருந்து ஆறறிவு மனிதன் வரையிலான உயிரிகளுக்கு மட்டுமே கூட்டியக்கம் என்கிற உயிர் உண்டு. இறைக்கு உயிர் இல்லை. உயிரின் மூலமான தான்தோன்றி இயக்கம் உண்டு.

7. நம்மை படைத்தது இறையா?
இல்லை நம்மை யாரும் படைக்கவில்லை. தமிழ்முன்னோர் நிறுவியுள்ள முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில், இடம் கடவுள் ஆகும். காலம் என்கிற தனி ஒன்றுகளின் அடுத்த நிலையான நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களின் வேறுவேறு எண்ணிக்கையிலான தான்தோன்றி கூட்டியங்கங்கள் ஆவோம் நாம். நாம் வேறுவேறாக இருப்பதற்கு எண்ணிக்கை மாற்றம் காரணம் ஆகும். 

8. இறை மாறாத ஒன்றா?
தனி ஒன்றுகளில் இருந்து கிளைக்கிற இறை, இறையின் தொகுப்பான கோள்கள், கோள்களில் ஓரறிவு உயிரியிலிருந்து ஆறறிவு மனிதன் வரையிலான மெய்யில் என்று பேரண்டப் பெருவெடி வரை தொடர் மாற்றங்களையும் மறு சுழற்சிகளையும் கொண்டது இறை.

9. இறையை நாம் வணங்க வேண்டுமா?
இறையை நாம் வணங்க வேண்டியதில்லை. இறை நான்கையும் தெய்வமாக உருவகித்து நன்றி பாராட்டுகிற, கொண்டாடுகிற மரபை தமிழ்முன்னோர் உருவாக்கியுள்ளனர். நன்றி பாராட்டுவதும் வெற்றிகளைக் கொண்டாடுவதும் நமது தொடர் வெற்றிகளுக்கு கடவுளில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கானது ஆகும்.

10. இறையிடம் நாம் பேச முடியுமா?
இறையிடம் நாம் பேச முடியாது. 

11. இறையாகிப் போன முன்னோர்களின் துணையைப் பெறுவது எப்படி? 
நமது முன்னோர்கள்- உயிர் காலமாதலில் கூட்டியக்கச் சுழியங்களாக, பட்டறிவுத்தரவுகளாக, தனி ஒன்றுகள் நிலையில், பேரண்டப் பெருவெடி வரை கடவுளில் இறைந்து கிடக்கின்றனர். அவர்களிடம் நேரடியாக பேச முடியாதெனினும் கடவுள் மூலமாக அவர்களின் பட்டறிவுத் துணையைக் கேட்டுப்பெற முடியும்.

12. நான் கேட்பதை எல்லாம் இறை கொடுக்குமா?
இறையை உணவாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு உடலை வளர்க்க முடியும். உடம்பை வளர்ப்பது உயிரை வளர்ப்பதும் ஆகும். இறைக்கு கடவுள் போல மறைபொருளான ஆற்றல் எல்லாம் கிடையாது.

13. யார் இறையிடம் அதிகம் கேட்டுப் பெறுகிறவர்கள்? 
இறையிடம் நாம்பெறுவது அடிப்படையில் உடம்பு ஆகும். முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும். இவ்வாறான உணவுப்பழக்கத்தினர் இறையிடம் அதிகம் பெறுகிறார்கள். இறையை சொத்துக்களாக பெறுபவர்கள் கடவுளிடம் அதற்கான கேட்புகளை வைப்பவர்கள் ஆவார்கள்.

14. ஏழைகளுக்கு எதுவும் இறை கொடுக்காதா?
நிலம், நீர், தீ, காற்று என்கிற இறையை எவ்வளவு வேண்டுமானலும் நீங்கள் எடுத்துக் கொள்ள முடியும். அதற்குத் தடையாக இருப்பது- முடியாது என்று கடவுளில் நீங்கள் முன்னெடுக்கிற புலம்பல் மட்டுமே.

15. நான் தீமை செய்யலாமா?
அறம் இறை சார்ந்தது அல்ல. கடவுள் சார்ந்தது.

16. நான் நல்லவனாக இருந்தும் எந்த நன்மையையும் எனக்கு இறை தரவில்லையே?
நிலம், நீர், தீ, காற்று என்கிற இறை உலகப் பொதுவானது. நிலம், நீர், தீ, காற்று என்கிற இறையை எவ்வளவு வேண்டுமானலும் நீங்கள் எடுத்துக் கொள்ள முடியும். அதற்குத் தடையாக இருப்பது- முடியாது என்று கடவுளில் நீங்கள் முன்னெடுக்கிற புலம்பல் மட்டுமே.

17. பாவ, புண்ணியம் பார்ப்பவரா இறை? 
அறம் இறை சார்ந்தது அல்ல. கடவுள் சார்ந்தது. பாவ, புண்ணியக் கணக்கு எழுதிக் கொண்டிருப்பது இறையின் வேலையும் அல்ல. 

18. இறை நல்லவரா? கெட்டவரா?
இறை என்பது நிலம் நீர் தீ காற்றுதானே அதை நல்லவகையாகப் பயன்படுத்துவதும் கெட்டவகையாகப் பயன்படுத்துவதும் உங்கள் கைகளில் தானே இருக்கிறது.

19. இறையை நான் பார்க்க முடியுமா?
இறையை தெய்வமாக கற்பித்துக் கொண்ட வடிவில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறவர்களால் அவர்கள் நினைக்கும் வடிவத்தில் இறையைக் காட்ட கடவுளால் முடியும். ஆனால் அப்படிப் பார்த்து ஒன்றும் ஆகப் போவதில்லை. உண்மையில் இறை காட்சி அளிக்கிற ஒன்றோ உங்களிடம் பேசுகிற ஒன்றோ அல்ல.

20. இறையை நான் நம்பி ஆக வேண்டுமா?
இறையை நம்ப வேண்டியதில்லை. நிலம், நீர், தீ, காற்று என்கிற இறை ஆற்றலை நீங்கள் எவ்வளவு வேண்டுமானலும் அள்ளிக் கொள்ள முடியும். அதற்குத் தடையாக இருப்பது- முடியாது என்று கடவுளில் நீங்கள் முன்னெடுக்கிற புலம்பல் மட்டுமே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.