Show all

மற்றவர்கள் தொன்மங்களை ஒருபோதும் தமிழர்கள் கொண்டாட முடியாது! கொண்டாடுவது-ஏற்பது இகழ்ச்சியாகிப் போகும்

தனித்தனி சான்றோர் பெருமக்கள் முன்னெடுத்த வெவ்வேறு சிந்தனைகளை ஒட்டி இயங்குகிற வெவ்வேறு மக்களுக்கு அந்தந்தச் சிந்தனைகள் அந்தந்த மக்கள் கூட்டத்திற்கு அவை அவைகள் தொன்மங்கள் ஆகலாம். தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடும், சங்கம் அமைந்து ஆய்ந்து, கூட்டுச் சிந்தனையில் தெளிவுபெறும் தமிழர்களுக்கு அவைகள் மடமைகளே.

17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நம்முடைய தலைஎழுத்து யாராலோ எழுதப்பட்டு அதன் போக்கில் நம்முடைய வாழ்க்கை நகர்வதாக உலகின் எந்த இனம் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு இயங்கலாம். ஆனால் தமிழர்கள் அப்படி இயங்க முடியாது.

ஆம்! தனித்தனி சான்றோர் பெருமக்கள் முன்னெடுத்த வெவ்வேறு சிந்தனைகளை ஒட்டி இயங்குகிற வெவ்வேறு மக்களுக்கு அந்தந்தச் சிந்தனைகள் அந்தந்த மக்கள் கூட்டத்திற்கு அவை அவைகள் தொன்மங்கள் ஆகலாம். 

ஆனால்- தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடும், சங்கம் அமைந்து ஆய்ந்து அறிவூட்டும் மொழிஅடையாளத்தைக் கொண்டாடும், கூட்டுச் சிந்தனையில் தெளிவுபெறும் தமிழர்களுக்கு அவைகள் மடமைகளே. ஏற்பதும் இகழ்ச்சியே.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று, ‘நம்முடைய தலைஎழுத்தை யாரும் எழுத முடியாது நாம்தான் எழுதிக் கொள்கிறோம்’ என்று விளக்குவார் கணியன் பூங்குன்றனார். 

தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று தெளிவு படுத்தும் தமிழ்ச் சொலவடைகள். 

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் 
என்று விளக்குவார் திருவள்ளுவர், அதை விளக்குவதற்கான அதிகாரத்திற்கு வினைத்திட்பம் என்றே பெயரிட்டு.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் தமிழர்களே! உங்கள் தலைஎழுத்தை யாரோ எழுதி வைத்து விட்டதாகவோ, அதன் வழியாகவே உங்கள் வாழ்க்கை நகர்வதாகவோ ஒரு தமிழன் எண்ணுவது எவ்வளவு மடமை என்பது தெளிவாகப் புரியும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது 
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்
எதை கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு
எதை நீ எடுத்துக் கொண்டாயோ 
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எதைக்  கொடுத்தாயோ அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொருநாள் அது வேறொருவருடையதாகும்
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்

இதை தமிழக முதல்வர் எடப்பாடியார் தமிழக மக்களுக்குச் சொன்னால், எல்லாம் என்னுடையது. நான் ஆளுகிற ஆட்சியில் உங்களுக்குக் கிடைப்பதை வைத்து மகிழுங்கள். அது பிடுங்கப்பட்டாலும் மகிழுங்கள். இதுதான் உங்களுக்கு நான் எழுதுகிற தலைஎழுத்து என்று பொருள்.

இதை ஒன்றிய ஆட்சியில் ஈடுபட்டிருக்கும் பாஜக சார்பாக, இந்திய மக்களுக்கு நரேந்திர மோடி சொன்னால், நாங்கள் ஆளுகிற ஆட்சியில் உங்களுக்கு கிடைப்பதை வைத்து மகிழுங்கள். ஹிந்தியோ சமஸ்கிருதமோ நாங்கள் சொல்லுகிற மொழியைப் படியுங்கள். நீட் மாதிரி நாங்கள் சொல்லுகிற தேர்வை எழுதி, மருத்துவக் கல்வி கிடைத்தால் படியுங்கள். இல்லாவிட்டால் கிடைக்கிற வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள். உங்கள் தமிழக அரசின் வரி வாங்கும் உரிமை, சரக்கு சேவை வரி என்ற தலைப்பில் பிடுங்கப்பட்டாலும் மகிழுங்கள். இதுதான் உங்களுக்கு நாங்கள்; எழுதுகிற தலைஎழுத்து என்று பொருள்.

இதையே அம்பானி மாதிரி ஒரு கார்ப்பரேட் சொன்னால், நம்முடைய தலைஎழுத்தை எழுதும் உரிமையாளர் அவர் என்று பொருள்.

ஆக-
யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கணியன் பூங்குன்றனார். தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற தமிழ்ச் சொலவடைகள். எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் என்ற திருக்குறள் ஆகிய வாழ்க்கை அனுபவங்களை, கூடி ஆய்ந்து தேர்ந்தவைகளை பத்துப்பாட்டாகவும், எட்டுத்தொகையாகவும், திருக்குறளாகவும், சிலப்பதிகாரமாகவும், தொல்காப்பியமாகவும், வாழ்க்கைத் தொன்மங்களாகப் பெற்றிருக்கும் தமிழர் நம்முடைய தலைஎழுத்தை யாரோ எழுதுவதாகக் கருதுவது மடமைதானே.

நம்முடைய தலையெழுத்தை நாமே எழுதினால் மட்டுமே வாகை சூட முடியும் என்று பேசும்- தமிழையும் தொன்மங்களையும் கொண்டு- உலகெலாம் பரவி உயர்ந்த தமிழர்களை- இன்று பின்னுக்கு இழுக்க முயன்று வரும் சக்திகளை அடையாளம் கண்டு விலக்க வேண்டிய நேரம் இது. கவனம் தமிழர்களே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.